ஆறாம் வகுப்பு தமிழ் புதிய பாடத்திட்டம் இயல்ஒன்று தமிழ்க்கும்மி

ஆறாம் வகுப்பு
தமிழ் புதிய பாடத்திட்டம்
இயல்ஒன்று

2.தமிழ்க்கும்மி

- பெருஞ்சித்திரனார்

Tamil Smart Class,

Tamil Smart Class,


நுழையும் முன்:

கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான
அனுபவம். கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடுவது பெரும்
மகிழ்ச்சி தருவதாகும். வாருங்கள்! தமிழின் பெருமையை
வாயாரப் பேசலாம். காதாரக் கேட்கலாம். இசையோடு
பாடலாம். கும்மி கொட்டி ஆடலாம்.

தமிழ்க்கும்மி

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!

ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!

பொய் அகற்றும்: உள்ளப் பூட்டறுக்கும் அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் உயிர்
மெய்புகட்டும்; அறமேன்மை கிட்டும்; இந்த
மேதினி வாழ்வழி காட்டிருக்கும்!

                                             - பெருஞ்சித்திரனார்.


சொல்லும் பொருளும்:

ஆழிப் பெருக்கு - கடல் கோள்
மேதினி - உலகம்

ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை



பாடலின் பொருள்:

இளம்பெண்களே! தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவிடும் வகையில் கைகளைக்
கொட்டிக் கும்மியடிப்போம்.
பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக்
கொண்ட மொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல்
நிலைத்திருக்கும் மொழி.
பொய்யை அகற்றும் மொழி, தமிழ். அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி;
அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி; உயிர் போன்ற உண்மையை
ஊட்டும் மொழி ; உயர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான
வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி


நூல் வெளி:

★ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு  என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

★ கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம்
முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

★ தென் மொழி, தமிழ்ச்சிட்டு,  தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும்
தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.

★ இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத் தொகுதிகளாக
வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.


கற்பவை கற்றபின் :

1. தமிழ்க்கும்மி பாடலை இசையோடு பாடி மகிழ்க.

2. பின்வரும் கவிதை அடிகளைப் படித்து மகிழ்க.

வான்தோன்றி, வளி தோன்றி, நெருப்புத் தோன்றி
மண் தோன்றி, மழை தோன்றி, மலைகள் தோன்றி
ஊன் தோன்றி, உயிர் தோன்றி, உணர்வு தோன்றி,
ஒளி தோன்றி, ஒலி தோன்றி, வாழ்ந்த அந்நாள்
தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!
                            - வாணிதாசன்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தாய் மொழியில் படித்தால்-------- அடையலாம்.


அ) பன்மை 
ஆ) மேன்மை 
இ) பொறுமை 
ஈ) சிறுமை

விடை : ஆ) மேன்மை

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் சுருங்கிவிட்டது

அ) மேதினி 
ஆ) நிலா 
இ) வானம் 
ஈ) காற்று

விடை- அ) மேதினி

3. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.------

அ) செத் + தமிழ் 
ஆ) செம் + தமிழ் 
இ) சென்மை + தமிழ் 
ஈ) செம்மை + தமிழ்

விடை : ஈ) செம்மை + தமிழ்

4. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-------

அ) பொய் + அகற்றும் 
ஆ) பொய் + கற்றும்
இ) பொய்ய + கற்றும் 
ஈ) பொய் + யகற்றும்

விடை-  அ) பொய் + அகற்றும்

5. பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.

அ) பாட்டிருக்கும் 
ஆ) பாட்டுருக்கும் 
இ) பாடிருக்கும் 
ஈ) பாடியிருக்கும்

விடை- அ) பாட்டிருக்கும்

6. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.--------------

அ) எட்டுத்திசை 
ஆ) எட்டிதிசை 
இ) எட்டுதிசை 
ஈ) எட்டி இசை

விடை- அ) எட்டுத்திசை 

நயம் உணர்ந்து எழுதுக.

1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.

(கொ)ட்டுங்கடி கும்மி (கொ)ட்டுங்கடி

(பெ)ரும் ஆழிப் (பெ)ருக்கிற்கும்

2. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.

கொ(ட்)டுங்கடி கும்மி கொ(ட்)டுங்கடி

எ(ட்)டிடவே கும்மி கொ(ட்)டுங்கடி


குறுவினா

1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல்
நிலைத்திருக்கும் மொழி. பொய்யை அகற்றும் மொழி, தமிழ். அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி; உயிர் போன்ற உண்மையை
ஊட்டும் மொழி ; உயர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி



2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவிடுட வேண்டும்.


சிறுவினா

1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?

பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.

2. தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொண்டவற்றை உம் சொந்த நடையில் தருக?

தமிழின் தொன்மையும் , தமிழின் சிறப்பையும் ,கால மாற்றத்தால் அழியாத தன்மையையும் அழகாக
தமிழ்க் கும்மி பாடலின்வழியாக தெளிவாக விலக்கி உள்ளார்.


சிந்தனை வினா:

தமிழ் மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?

பொய்யை அகற்றும் மொழி, தமிழ். அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி; உயிர் போன்ற உண்மையை
ஊட்டும் மொழி ; உயர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி.



4 Comments

Previous Post Next Post